பாதையில்லை-ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வெறிச்!
ஆரியங்காவு: பாதை பாரமரிப்புக்காக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் புகழ் பெற்ற ஆரியங்காவு ஐயப்பன் கோவில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் மாலை அணிந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தமிழகத்திலிருந்து தேனி, கம்பம், வாலையாறு, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, நாகர்கோவில், கோவை, பாலக்காடு, மைசூர் வழியாகவும் வாகனங்களில் வருவது வழக்கம்.
தற்போது ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தினமும் பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஐயப்ப பக்தர்களில் பாதிப் பேர் தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை-புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு வந்து ஆரியங்காவில் அய்யர் வேடம் பூண்டு இருக்கும் ஐயப்ப சாமியை வணங்கி விட்டு செல்வது வழக்கம்.
அதே சமயம் பல்வேறு பாதை வழியாக சபரிமலை சென்று ஊர் திரும்பும் பக்தர்கள் இந்த பாதை வழியாக திரும்பும்போது இத்தலத்திற்கு வந்து விட்டு செல்வது வழக்கம்.
ஐயப்ப பக்தர்களின் வருகையால் தினமும் புனலூர் முதல் ஆரியங்காவு வரையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள், பலசரக்கு கடைகள் நடத்தி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கேரள எல்லையான கோட்டைவாசல் முதல் புனலூர் வரை 49 கிமீக்கு ரூ.26 கோடி செலவில் புதிய சாலை போடும் பணி தொடங்கியதால் சாலை முழுமையாக அடைக்கப்பட்டது.
இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும், சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்களும் ஆரியங்காவிலுள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அச்சன்கோவில் வழியாக வாகனங்களில் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆரியங்காவு ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகையில்லாததால் கோவில் வாளகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் ஆரியங்காவு முதல் புனலூர் வரையிலுள்ள வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் வியாபார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.