தெ.தேசத்துடன் கை கோர்க்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
ஹைதராபாத்: ஆந்திராவில் இடதுசாரிகளின் முயற்சியால் உருவாகி வரும் மாபெரும் கூட்டணியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இணைகிறது. இக்கூட்டணியில் ஏற்கனவே தெலுங்கு தேசமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலை காங்கிரஸுடன் இணைந்து சந்தித்த டி.ஆர்.எஸ் தற்போது தெலுங்கு தேசத்துடன் கை கோர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், தெலுங்குதேசம், இடதுசாரி கூட்டணியில் இணையும் நேரம் வந்து விட்டது. இருப்பினும் இதுதொடர்பான அரசியல் முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார்.
தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர் ராவ் இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியாகும். விரைவில் அதை வெளியிடுவோம் என்றார்.
சந்திரசேகர் ராவ் கூறுகையில், நாங்கள் பல்வேறு போராட்டங்களில் முன்பு ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம். இனியும் அவ்வாறே செயல்படுவோம்.
தெலுங்கு தேசம் கட்சிக்காக நானும், நாயுடுவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டுள்ளோம். மறுபடியும் எனது பழைய தோழருடன் இணைந்து செயல்படவிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இருவரும் இணைந்து பொதுப்பிரச்சினைகளுக்காக போராடும் நேரம் வந்து விட்டது என்றார்.
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியும், காங்கிரஸும், டி.ஆர்.எஸ்ஸை இழுக்க தீவிரமாக முயன்று வந்தன. இந்த நிலையில் தெலுங்கு தேசம் முந்திக் கொண்டு விட்டது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அவர்கள் அபகரித்து விடாமல் தடுத்து இடதுசாரிகள் கூட்டணிக்கு கூட்டி வந்துள்ளார் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.