அதிமுக எம்.எல்.ஏ சாமி உள்ளிட்டோரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை: தேர்தல் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. சாமி உள்ளிட்ட அதிமுகவினரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டு வந்த நடிகர் ராமராஜனின் கார் உள்ளிட்ட அதிமுகவினரின் கார்கள் தாக்கப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சாமி உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். அப்போது அவர்களது கார்களை தடுத்து நிறுத்திய போலீஸார் சோதனையிட்டனர்.
இதையடுத்து சாமிக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சாமி உள்ளிட்டோர் போலீஸாரைத் தாக்கியதாக போலீஸ் தரப்பு கூறியது. ஆனால் சாமி உள்ளிட்ட அதிமுகவினரை போலீஸர் சரமாரியாக தாக்கியதாக அதிமுக தரப்பு கூறியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாமி உள்ளிட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அனைவரும் திருமங்கலம் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று இந்த மனுக்களை விசாரித்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஜாமீன் தரக் கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து அனைவரது ஜாமீன் மனுக்களை நிராகரித்து நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டார்.