சிவகாசியில் ரூ. 5 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்
சிவகாசி, கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில் பிரதான தொழில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலாகும். இங்கு கையினால் செய்யப்படும் தீப்பெட்டி ஆலைகள், இயந்திர தீப்பெட்டி ஆலைகள் என ஆயிரக்கணக்கான ஆலைகள் உள்ளன.
மேலும் இப்பகுதியில் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல மொத்த வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர்.
தினமும் 200க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் ஒரு லட்சம் பண்டல்கள், டில்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மெழுகு, சால்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் பலமடங்கு விலைஉயர்வால் தீ்ப்பெட்டி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் தீப்பெட்டி தொழிலை நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர்.
இந்நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொடர் மழை போன்ற பல்வேறு இன்னல்களுக்கு இடையே தீப்பெட்டி தொழிலை நடத்தி வரும் உற்பத்தியாளர்கள் தற்போது நடைபெற்று வரும் லாரி ஸ்டிரைக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு டீசல் விலையை குறைக்க கோரி லாரி உரிமையாளர் கடந்த 4ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டியில் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றி செல்லும் 200க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.
இதனால் குடோன்களில் தீப்பெட்டி பண்டல்கள் மலைபோல் தேங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் இருப்பில் உள்ளன. தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை செய்யப்படாததால் உற்பத்தியாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.