'நம்புங்கோ நம்புங்கோ'.. அன்பளிப்பு தான் கொடுத்தாராம் ஸ்டாலின்
திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் பேசிய ஸ்டாலின் மையிட்டான்பட்டியில் பேசுகையில்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கிராமத்தில் மட்டும் ரூ. 32.72 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கிராமத்திற்கு இன்னும் ரூ. 55 லட்சம் செலவில் பணிகள் நடக்கவுள்ளன.
ஒரு கிராமத்துக்கு இவ்வளவு என்றால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பணிகள் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இன்னும் 3 மாதம் கழித்து நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. ஓட்டுக்களை வாங்கி விட்டு பணிகளை செய்யாமல் இருந்தால் நீங்கள் பின்னால் எங்களை எப்படி ஊருக்குள் அனுமதிப்பீர்கள்?.
சொன்ன அனைத்து திட்டங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்போம். அனைத்து குடும்பத்தினருக்கும் கலர் டிவி, கேஸ் அடுப்பு போன்றவை கண்டிப்பாக வழங்கப்படும்.
திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு நான் பணம் கொடுத்ததாக ஒரு தொலைக்காட்சி திரும்ப, திரும்ப செய்தி வெளியிட்டு வருகிறது.
நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. எந்த வாக்காளர்களுக்கும் நான் பணம் கொடுக்கவில்லை. நான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு குழந்தையை என்னிடம் கொடுத்து பெயர் வைக்கும்படி கூறினார்கள். அந்த குழந்தைக்கு பெயர் சூட்டிய நான் அன்பளிப்பு கொடுத்தேன்.
பொதுவாக ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டும்போது அன்பளிப்பு கொடுப்பது தமிழர்களின் கலாச்சாரம். அதுபோல் அந்த குழந்தைக்கு அன்பளிப்பு கொடுத்ததை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள். அதைப்பற்றி கவலையில்லை.
ஜெயலலிதா தனது பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டுகளில் பணம் போட்டுள்ளார். இதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. என்மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா தோல்வி பயம் காரணமாக இதுபோன்று தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் என்றார்.
தயாநிதி-அழகிரியும் பிரச்சாரம்:
பல்வேறு பகுதிகளில் மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரும் ஸ்டாலினுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.மீனாட்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், வாக்காளர்களை பார்த்து எங்களில் யார் முதலில் பேச வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர்கள் முதலில் அழகிரி பேச வேண்டும் என்றனர்.
இதையடுத்து ஸ்டாலினிடமிருந்து மைக்கை வாங்கிய அழகிரி, என்னை விட திமுகவுக்காகவும், உங்களுக்காகவும் அதிகம் உழைத்தவர் மு.க.ஸ்டாலின் தான். எனவே அவர் தான் முதலில் பேச வேண்டும் என்றார்.
இதையடுத்து ஸ்டாலின் பேச அடுத்துப் பேசிய அழகிரி, திமுகவுக்கு வாக்களியுங்கள். எப்போதும் எங்களை பிரித்து பார்க்க வேண்டாம் என்றார்.