For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு தடாலடியாக போக முடியாது-பாலு

By Sridhar L
Google Oneindia Tamil News

Balu
சென்னை: ஒரு நாட்டுக்குப் போவது என்பது சாதாரணமானதல்ல. கதவை உடைத்துக் கொண்டா போக முடியும். பேச்சுவார்த்தைக்கு இன்னும் இலங்கை தயாராகவில்லை என்று பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கோபமாக பதிலளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பிரணாப் முகர்ஜி இலங்கை போவது ஏன் தாமதமாகிறது என்று கேட்கப்பட்டது.

அதற்கு பாலு பதிலளிக்கையில், இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜி அங்கு சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது. இந்தப் பேச்சு வார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. அங்கு பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது உடனடியாக சாத்தியமானதல்ல.

இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.

டீசல் விலையை குறைக்கக்கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக பல முறை நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறோம். தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம்.

லாரி உரிமையாளர்களை சமரசப்படுத்துவதற்கும், தீர்வு ஏற்படுவதற்கும் என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை உடனே நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதில் எண்ணை கம்பெனிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நஷ்டத்தை சரிகட்ட ஆலோசிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உடனடியாக மீண்டும் விலை குறைப்பு செய்ய வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும்?

அவர்கள் கேட்டபடி விலையை குறைத்தால், டீசல் உற்பத்திக்காக கச்சா எண்ணையை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் போய்விடும். இதனால் மேலும் பல பிரச்சினைகள் உருவாகும் என்பதையும் சிந்திக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடந்த நாலரை ஆண்டுகளாக மிகவும் உயர்ந்து இருந்தது.

தற்போதுதான் அதன் விலை குறைந்து உள்ளது. என்றாலும், கச்சா எண்ணை விலை உயர்வால் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட ஒட்டு மொத்த நஷ்டத்தை சீரடைய வைக்க வேண்டும் என்பதால், டீசல் விலையை உடனே குறைக்க முடியாது.

ஹாட்ரிக் அடிப்போம்...:

ஏற்கனவே 2 இடைத் தேர்தல்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. திருமங்கலத்தில் பெறும் வெற்றி திமுகவுக்கு ஹாட்ரிக்' வெற்றியாக அமையும்.

ஸ்டாலின் 'கை' தான் கொடுத்தார்..:

அங்கு வாக்காளர்களுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணம் கொடுத்தார் என்று கூறுவது தவறு. அவர் அந்த நபருக்கு கைதான் கொடுத்தார்.

குறிப்பிட்ட டி.வி.களில் அந்த செய்தியை ஒளிபரப்பினார்கள். காட்சிகளை வெட்டி ஒட்டி ஜோடித்து வெளியிடும் சாகசம் எல்லாம் தற்போது சகஜம். இதுபோன்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்புவது நடைமுறை. அவற்றை ஜெயலலிதா மதிப்பதில்லை. ஆனால் நாங்கள் அதுபோன்ற நோட்டீசுகளுக்கு உரிய விளக்கம் அளிப்போம்.

சென்னை துறைமுகத்தில் இருந்து (போர் நினைவுச் சின்னத்தில் இருந்து) மதுரவாயல் வரை 19 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை நாளை காலை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைக்கிறார்.

இது இந்தியாவின் மிக நீளமான மின்னல் வேகப் பாதை. இந்தப் பாலத்தை அமைக்க ரூ.1,655 கோடி செலவாகும். இதில் 40 சதவீதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், 50 சதவீதத்தை தமிழக அரசு மற்றும் சென்னை துறைமுகமும் ஏற்கும். மீதமுள்ள தொகை பி.ஓ.டி. மூலம் பெறப்படும். தமிழகத்துக்கு மட்டும் எனது துறைகள் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.54,369 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பாலு.

கடற்கரை சாலை போர் நினைவு சின்னம் அருகே தொடங்கும் இந்த பாலம் காமராஜர் சாலை, ஸ்பர்டேங் ரோடு, கோயம்பேடு வழியாக சென்று மதுரவாயல், கொல்கத்தா சாலையில் முடிவடையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X