சந்தையிலிருந்து நீக்கம்-யுஎஸ் வழக்கு!!
மும்பை/நியூயார்க்: சத்யம் நிறுவனத்தின் பங்குகளை தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலிருந்து நீக்கப்படுவதாக செபி அறிவித்துள்ளது.
அதே போல மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்இ-லிருந்தும் சத்யம் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் நிப்டி, சென்செக்சில் சத்யம் பங்குகளை இனி வாங்கவோ, விற்கவோ முடியாது.
மேலும் சிஎன்எக்ஸ் 500 பட்டியலில் இருந்தும் சத்யம் நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சத்யம் வெளியேற்றப்பட்டுவிட்டது. அங்கு 1 டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டன சத்யம் பங்குகள் விலை.
இன்னும் சென்செக்ஸிலிருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுக்க உள்ள சத்யம் நிறுவனத்தின் கிளைகளில் 53,000பேர் பணியாற்றுகின்றனர். இன்றைய சூழலில், இந்த நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் அனைவருமே வெளியேறிவிட்டனர். எனவே இந்த ஊழியர்கள் கதி என்னவென்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
அமெரிக்காவில் வழக்கு:
இதற்கிடையே, சத்யம் நிறுவனத்தின் வைப்புப் பத்திரங்களை வாங்கி ஏமாந்ததவர்கள் சார்பாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று நியூயார்க் கோர்டில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் நேரில் ஆஜராக வேண்டும் ராஜுவுக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ராஜு இப்போது இந்தியாவில் இல்லை. இந்த வழக்கில் ஆஜராக அமெரிக்கா போய்விட்டார் என்றே நேற்று கூறப்பட்டது. ஆனால் பின்னர், அவரது சார்பில் வேறு ஓருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டெக்ஸாஸிலும் இதேபோல இன்னொரு வழக்கு சத்யம் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.
வேண்டாம் இந்திய நிறுவனங்கள்:
அபர்தீன், ஸ்விஸ் பைனான்ஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் சத்யம் முதலீட்டிலிருந்து வெளியேறிவிட்டன.
சத்யம் நிறுவனத்தின் இந்த தள்ளாட்டத்துக்குப் பிறகு வரிசையாக அதன் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் வெளியேறி வருகின்றனர்.
போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை வேறு நிறுவனங்களுக்கு தர முடிவு செய்துள்ளன. இதில் கவனிக்கத்தக்கது, வேறு இந்திய நிறுவனங்களுக்கு தங்கள் ஆர்டர்களைத் தர சர்வதேச நிறுவனங்கள் தயங்கத் தொடங்கியுள்ளது தான.
இதைவிட அதிக செலவானாலும் பரவாயில்லை, வேறு நாடுகளைச் சேர்ந்த, இந்தியர் எவரும் பணிபுரியாத நிறுவனமாகத் தேடுங்கள் என பிரபல அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அரசின் சில முக்கியமான துறைகளின் கணக்கு வழக்குகளை சத்யம்தான் நிர்வகித்து வந்தது. இந்த நிறுவனத்தின் குளறுபடிகள் அந்தக் கணக்குகளையும் பாதித்திருக்குமோ என அஞ்சுகின்றன வாடிக்கை நிறுவனங்கள்.
முதலீட்டு நிறுவனங்கள் கடும் சாடல்!:
சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களாகத் திகழ்ந்த அபர்தீன், பிடெல்டி, ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல், விஸார்டு அஸெட் மேனேஜ்மெண்ட், எல்ஐசி, ஜேபி மார்கன், சிங்கப்பூர் அரசு, சிட்டி குரூப் ஆகியோர் ஒட்டுமொத்தமாக சத்யம் நிறுவனத்தின் மோசமாக நிர்வாகத் தன்மையைச் சாடியுள்ளனர்.
ஆனால் எல்ஐசி நிறுவனம் மட்டும் தன்னிடமுள்ள சத்யம் பங்குகளை இப்போதைக்கு விற்கும் திட்டமில்லை என அறிவித்துள்ளது.
ரூ.39க்கு சத்யம் பங்குகள்!:
சத்யம் நிறுவனத்தின் பங்கு விலை இப்போது ரூ.39.80 ஆகக் குறைந்துள்ளது. நேற்று மாலை பங்கு வர்த்தகம் முடியும் தறுவாயில் இருந்த விலை இது.
இந் நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையிலிருந்து சத்யம் வெளியேற்றப்பட்டது.
மற்ற நிறுவனக் கணக்குகளை விசாரிக்க முடிவு:
இதற்கிடையே, மற்ற பெரிய ஐடி நிறுவனங்களின் உண்மையான நிதி நிலை குறித்தும் விசாரணை நடத்த மத்திய அரசின் கம்பெனி விவகாரத் துறை முடிவு செய்துள்ளது.