ஊழியர்கள் கிரெடிட் கார்டுகள் முடக்கம்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்துக்கு பணப் பிரச்சினை கிடையாது. எனவே ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளக் குறைப்பெல்லாம் கிடையாது, தைரியமாக இருங்கள் என அறிவித்துள்ளது சத்யம் நிர்வாகம்.
'அடுத்த மாத சம்பளத்துக்கு குறைந்தபட்சம் ரூ.550 கோடி தேவை. ஆனால் கையிருப்பு 300 கோடி ரூபாய்க்கும் குறைவுதான்' என முன்னதாக சத்யம் இயக்குநர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். இது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் அரசே நிர்வாகத்தை ஏற்றுள்ளது.
இன்று சத்யம் நிறுவன மனித வளப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யம் நிறுவனத்தின் நல்ல வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்குப் போகவில்லை. அவர்கள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் ஆபத்தில்லை.
எனவே ஊழியர்களுக்கான சம்பளம் எப்போதும்போல குறைவின்றி வழங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகள் முடக்கம்:
ஆனால், சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு கடன் அட்டைகளை வழங்கியுள்ள பல வங்கிகள், இப்போது சத்யம் நிலைமை புரிந்தவுடன், அவற்றை முடக்கிவிட்டது தெரிய வந்துள்ளது.
பெரும்பாலும் இந்த கடன் அட்டைகளுக்கு ஊழியர்களின் சம்பளத்தைப் போல 5 மடங்கு கடன் வசதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த மாத சம்பளமே சந்தேகம் என கிளம்பிய செய்திகளால் ஆடிப்போன வங்கிகள், உடனடியாக 20,000 கடன் அட்டைகளுக்குமேல் முடக்கி வைத்துவிட்டன.
நிறுவனத்தை காப்பாற்ற ஊழியர்கள் முயற்சி:
இதற்கிடையே சத்யம் நிறுவன ஊழியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு நிறுவனத்தை மீட்டெடுப்போம் என்ற புதிய கோஷத்துடன் களமிறங்கியுள்ளனர்.
இதற்கென தனி பேனர் ஒன்றை தயாரித்துள்ள சத்யம் ஊழியர்கள், நிறுவனத்தின் மீது தங்கள் நம்பிக்கையைக் காட்டும் விதத்தில் இந்த பேனரில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
எங்கள் ஊழியர்களை நம்பிக்கையோடு வைத்திருக்க இந்த சிறு முயற்சியை சீனியர்களான நாங்கள் எடுத்துள்ளோம். இந்த சிக்கலிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை நேற்றுவரை இல்லை. இப்போது வந்துள்ளது என்று சில மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.