தமிழக ஐடி துறையில் முதலீடு செய்வது வீண்.. கூறுகிறார் ஆற்காடு வீராசாமி
சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்காடு வீராசாமி பேசுகையில், நான் வெளிப்படையாக சொல்கிறேன். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தற்போதுள்ள சூழலில், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு எதிர்காலம் இல்லை.
அதில் முதலீடு செய்வது வீண். சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை மூடப்பட்டு விட்டன. கோவையிலும் இதே நிலைதான். ஐ.டி நிறுவனங்களுக்கு பல நாடுகளிலும் தோல்வி கிடைத்து வருகிறது.
அரசு என்னதான் தகவல் தொழில்நுட்ப் பூங்காக்களை கட்டிக் கொடுத்தாலும் கூட அதில் இருப்பதற்கு யாரும் வர மாட்டேன் என்கிறார்கள். வருவதற்கு ஆளே இல்லை.
எனவே தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு பெரும் சரிவு காணப்படும் இந்த நேரத்தில் அதில் அதிக முதலீடுகளைச் செய்து பணத்தை வீணாக்காதீர்கள்.
அதற்குப் பதில் செங்கல், சிமென்ட், ஸ்டீல், ஜவுளி, காகிதம் ஆட்டோமொபைல், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் செய்யலாம். தாராளமாக இவற்றில் ஈடுபடலாம்.
இன்னும் 25 வருடங்களுக்கு இந்தத் துறையில் எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு மூட்டை சிமென்ட் தயாரிக்க 100 ரூபாய் செலவழித்தீர்களானால், 220 ரூபாய் லாபம் பார்க்கலாம். அதேபோல, ஸ்டீல் தொழிலில் 40 முதல் 50 சதவீத அளவுக்கு லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமானம் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் பார்க்கலாம் என்றார் ஆற்காடு வீராசாமி.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் பெங்களூரை முந்தி விடும் வேகத்தில் சென்னையை வேகமாக மாற்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார் முதல்வர் கருணாநிதி. இதற்காகவே சென்னையில் அவரது முந்தைய ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமான டைடல் பூங்கா கட்டப்பட்டது.
மேலும், அதேபோல இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்டவற்றிலும் இதேபோன்ற தொழில்நுட்பப் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது.
தமிழகத்தை ஐடி துறையில் தன்னிறைவு பெற்ற, முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் தயாநிதி மாறனுக்கு இப்பொறுப்பை வாங்கித் தந்தார் முதல்வர் கருணாநிதி. தற்போது இத்துறையின் அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ராசாதான் உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தயவு செய்து, ஐடி துறையில் முதலீடு செய்யாதீர்கள், அது வீண், பேசாமல் சிமென்ட், செங்கல் துறைகளில் பணத்தைப் போடுங்கள் என மூத்த அமைச்சரான ஆற்காடு வீராசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு வீராசாமியின் கருத்து குறித்து இந்த மாநாட்டில் கநல்து கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, எனவே அவர் கூறியது குறித்து என்னால் கருத்து கூற முடியாது என்று கூறி விட்டார் ராசா.