என்ஆர்ஐ மாநாடு-லண்டனிலிருந்து வந்த மிரட்டல்
சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சென்னை வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், லண்டனிலிருந்து வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கார் வெடிகுண்டுகள் மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று மர்ம ஆசாமி ஒருவன் தொலைபேசியில் போலீசாருக்கு விடுத்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையம் வழக்கு் பதிவு செய்து விசாரித்து வருகிறது. போலீஸாரின் விசாரணையில், லண்டனில் உள்ள செல்போனிலிருந்து மிரட்டல் விடுத்த நபர் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மத்திய உளவுத்துறை மற்றும் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.