கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை
மும்பை: சோமாலியா கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எம்.வி. டிலைட் கப்பல் மற்றும் அதில் இருந்த ஏழு இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இந்தியர்களும் நலமுடன் இருப்பதாக இந்திய கப்பல் துறை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு டிலைட் கப்பலை கடற் கொள்ளையர்கள் விடுவித்தனர். அதில் இருந்த 25 ஊழியர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஏழு பேர் இந்தியர்கள் ஆவர்.
ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட டிலைட் கப்பல், கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி ஏடன் வளைகுடா பகுதியில் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் இந்தியர்கள் தவிர, பாகிஸ்தானியர் இருவர், பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஏழு பேர், ஈரானியர்கள் ஏழு பேர் மற்றும் 2 கானா நாட்டவரும் இருந்தனர்.
38 ஆயிரம் டன் கோதுமையுடன் ஈரான் துறைமுகமான பந்தர் அப்பாஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது டிலைட் கடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் கடற் கொள்ளையர்கள் ஏடன் வளைகுடா பகுதியில் 130க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். உலகின் மிகவும் அபாயகரமான கடற் பகுதியாக தற்போது ஏடன் வளைகுடா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.