லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
டெல்லி: நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.
மத்திய அரசு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளைக் கைது செய்துள்ளபோதிலும், போராட்டத்தை விலக்கிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. இதுதொடர்பாக மத்திய அரசு எஸ்மா சட்டத்தையும் பிரயோகித்தது. இருப்பினும் லாரி உரிமையாளர்கள் தங்களது முடிவில் திடமாக இருந்தனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் லாரி ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டது. மாநில முதல்வர் அசோக் சவானின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அம்மாநில லாரி, டேங்கர்கள், டெம்போ, பஸ் வாகன மகா சங்கம் அறிவித்தது.
இதேபோல கர்நாடகம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒரு பிரிவினர் லாரிகளை ஓட்டத் தொடங்கினர்.
லாரி ஸ்டிரைக்கை நடத்தி வரும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் போட்டி அமைப்பான அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் லாரிகளை ஓட்டத் தொடங்கினர். இந்த அமைப்புடன் ஏற்கனவே மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லாரிகள் சங்க நிர்வாகிகளுடன் இன்று அமைச்சர் பாலு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாலு, லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது. இதுதொடர்பாக லாரிகள் சம்மேளன நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் விடுதலை செய்யப்படுவார்கள். அதேசமயம், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்.
லாரி அதிபர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க உயர் மட்டக் கமிட்டி அமைக்கப்படும். அந்தக் கமிட்டி அனைத்து கோரிக்கைகளையும் பரிவுடன் பரிசீலிக்கும் என்றார்.
தமிழகத்தில் 18ம் தேதி வரை ஸ்டிரைக்?:
இதற்கிடையே தங்களது டிரைவர்கள் அனைவருக்கும் வரும் 18ம் தேதி வரை விடுமுறை தரப்பட்டுவிட்டதாகவும், இதனால் லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆனாலும் 18ம் தேதி வரை லாரிகள் இயங்காது என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
8 நாள் அவஸ்தை ...
முன்னதாக லாரி ஸ்டிரைக் இன்று 8வது நாளாக பெரும்பாலான மாநிலங்களில் நீடித்தது.தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் முழு அளவில் இருந்தது.
ஸ்டிரைக்கை முறியடிக்க ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எஸ்மா பிரயோகிக்கப்பட்டது.