அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த மக்கள் அங்கீகாரம்: கருணாநிதி
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் முடிவு குறித்து கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, கடந்த தேர்தலில் தோல்வியுற்ற தொகுதியில், இந்த முறை மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது திமுக.
இது திமுக அரசின் சாதனைகளுக்கும், திட்டங்களுக்கும், மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம் என்று கருதுகிறேன்.
இந்த வெற்றிக்குப் பாடுபட்ட கழகத்தினருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் எனது பாராட்டுக்கள் என்றார்.
இதை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக திமுக கருதுகிறதா என்ற கேள்விக்கு, எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றிருந்தால் அப்படித்தான் கூறியிருப்பார்கள் என்றார் கருணாநிதி.
பாமக ஆதரவு இல்லாமை, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இல்லாமை ஆகியவற்றைத் தாண்டி திமுக பெரும் வெற்றி பெற்றிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுகுறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார் கருணாநிதி.
மாபெரும் வெற்றி - ஸ்டாலின்:
திருமங்கலம் வெற்றி குறித்து திமுக பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞரின் சீரிய தலைமையில் நடந்து வரும் திமுக ஆட்சியில், கலைஞர் தலைமையில் ஆற்றி வரும் சாதனைகளுக்குக் கிடைத்த மகுடமாக இதைக் கருதுகிறோம்.
திமுக அரசின் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், மக்கள் நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளனர் என்றார்.