ப.சிதம்பரம் செயலர் எனக் கூறி அமைச்சருக்கு திட்டு
திருவனந்தபுரம்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் செயலாளர் என்று கூறிக் கொண்டு ஒரு நபர், கேரள வனத்துறை அமைச்சரை தரக் குறைவாக திட்டியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.
கேரள வனத்துறை அமைச்சர் பினாய் விஸ்வத்தை, நாராயணன் என்பவர் தொடர்புகொண்டு தன்னை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் நேர்முக உதவியாளர் என அறிமுகம் செய்துகொண்டார்.
சபரிமலை அருகே உள்ள பொன்னம்பல மேட்டிற்கு செல்ல அனுமதி வேண்டும் என்று கோரினார்.
பொன்னம்பல மேடு பகுதியில் பெரியார் புலிகள் சரணாலயம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து விடவே அந்த நபர் கேரள அமைச்சரை அணுகினார். ஆனால் அவர் மீது அமைச்சர் விஸ்வத்திற்கு சந்தேகம் எழவே இப்பிரச்சனையில் தலையிட முடியாது என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அமைச்சரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் விஸ்வம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை பார்த்ததும் ப.சிதம்பரம் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய அதிகாரிகளில் நாராயணன் என்ற பெயரில் யாரும் இல்லை என்று கூறியதோடு, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு ப.சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.