மோடி பிரதமராக வேண்டும்: சுனில் மிட்டல்-அனில் அம்பானி
ஏற்கனவே பிரதமர் பதவிக்கு அத்வானியை விட நானே சிறந்தவன் என்று முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் கூறி வருகிறார். இந் நிலையில் மோடியை கொம்பு சீவி விடும் வேலையில் இந்திய தொழிலதிபர்கள் இறங்கியுள்ளனர்.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடந்த தொழில்துறை மாநாட்டில் பேசிய ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை இங்கே பேசியவர்கள் குஜராத்தின் சி.இ.ஓ. என்று குறிப்பிட்டனர். அவரால் குஜராத்தை மட்டுமல்ல நாட்டையே நடத்திச் செல்ல முடியும் என்றார்.
ரிலைன்ஸ் அதிபர் அனில் அம்பானி பேசுகையில், இங்கு எனது தந்தை தீருபாய் அம்பானி முன்பு பேசியதை நினைவுகூற விரும்புகிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடி இருந்தால் எப்படி இருக்கும் என்று முன்பு இங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் எனது தந்தை பேசினார். அதையே தான் நான் இப்போதும் சொல்கிறேன். அவரைப் போன்ற ஒருவர் தான் நாட்டின் அடுத்த தலைவராக இருக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே பிரதமர் பதவி மீது நரேந்திர மோடி கண் வைத்துள்ள நிலையி்ல் தொழிலதிபர்களின் இந்தப் பேச்சு பாஜகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு 75 நாட்களே உள்ள நிலையில் ஏற்கனவே அத்வானிக்கு எதிராக ஷெகாவத் ஒரு பக்கம் புயலை கிளப்பியுள்ளார். இந் நிலையில் இவர்கள் வேறு நரேந்திர மோடியை தூண்டிவிட்டு வருகின்றனர். இது கட்சிக்கு நல்லதல்ல என்றார் நேற்று அத்வானியின் வீட்டில் சங்க்ராந்தி விருந்தில் பங்கேற்ற மூத்த பாஜக தலைவர் ஒருவர்.
அதே நேரத்தில் இது குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, சங்க்ராந்தி விருந்து சாப்பாடு எப்படியிருக்கிறது என்று பதில் சொன்னார்.
அங்கிருந்த அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் இந்தக் கேள்விக்கு பதில் தரவில்லை.
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையி்ல், வாஜ்பாயின் வழி காட்டுதலால், அத்வானியின் கொள்கைகளால் ஆட்சி நடத்தும் பாஜகவி்ன் அனைத்து முதல்வர்களுமே சிறப்பாக செயல்படுகின்றனர். எங்கள் கட்சியில் மாநில அளவில் மிகச் சிறந்த இருப்பதற்கு உதாரணம் தான் மோடி என்றார்.
''அத்வானி பார் பி.எம்'':
இதற்கிடையே பாஜக இளைஞரணி தேசிய அளவில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு வரி கோஷம் ''அத்வானி பார் பி.எம்'' ('Advani for PM") என்பதாகும்.
இதை வலியுறுத்தி நாடு முழுவதும் பேனர்கள், விளம்பரங்கள் வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் ஸ்டைலில் கார்களில் ''அத்வானி பார் பி.எம்'' என்ற அவரது படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோடிக்கணக்கான ஸ்டிக்கர்கள் அச்சிடப்பட்டுள்ளன.