சத்யம் சாப்ட்வேர் என்ஜீனியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அக்ஷய் விஷால் (26). சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார்.
செவ்வாய்க்கிழமை, கால்கள் மற்றும் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் விஷால்.
அவரை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிலர் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
வழிப்பறியில் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த மோதலில் விஷால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விஷால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தனக்கு வந்துள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள விஷாலின் தந்தை லட்சுமண் மூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டுதான் விஷால் அமெரிக்காவுக்கு பணியில் நியமிக்கப்பட்டார். ஹைதராபாத், பேகம்பேட்டையில் விஷாலின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சமீப காலமாக அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சாப்ட்வேர் என்ஜீனியர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி சியாட்டில் நகரில் அர்பனா ஜினாகா என்ற என்ஜீனியரும், செப்டம்பர் மாதம் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் செளம்யா ரெட்டியும், சிகாகோவில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்த அவரது உறவினர் விக்ரம் ரெட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன சாப்ட்வேர் என்ஜீனியர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.