சுண்டைக்குளம் வீழ்ந்தது - யாழ்ப்பாணம் முழுவதும் இலங்கை வசம் வந்தது
கொழும்பு: யாழ்ப்பாணம் தீபகற்பம் முழுவதும் இலங்கை ராணுவத்தின் வசம் வந்துள்ளது. அங்குள்ள கடைசிப் பகுதியையும் விடுதலைப் புலிகள் இழந்துள்ளனர்.
9 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் முழுவதையும் இலங்கைப் படைகள் தங்களது வசம் கொண்டு வந்துள்ளன. வடக்கில் மிக மிக முக்கியமான பகுதியான யாழ்ப்பாணம் தீபகற்பம், தமிழர்கள் நிறைந்த, வளமான பகுதியாகும். மேலும் ஈழப் போரில் முக்கியமான பகுதியும் கூட. இதை முழுவதுமாக புலிகள் இழந்துள்ளது பெருத்த பின்னடைவாக கருதப்படுகிரது.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் விடுதலைப் புலிகள் வசம் கடைசியாக இருந்த சுண்டைக்குளம் கிராமத்தை தற்போது இலங்கை படைகள் மீட்டுள்ளன.
இங்கு நடந்த கடும் சண்டையில், புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களி்ல் ஒருவரான திரு என்பவர் கொல்லப்பட்டார். அவர் கடற் புலிகள் பிரிவின் முக்கியத் தலைவர் ஆவார்.
இங்கு நடந்த சண்டைக்குப் பின்னர் 100 கடற்புலிகளின் படகுகள், 400 கண்ணிவெடிகள், 40 டாங்குகளை தகர்க்கும் கடற் கண்ணிவெடிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆனையிரவை இலங்கை ராணுவம் மீட்டது. தற்போது முல்லைத்தீவைப் பிடிக்கும் நோக்கில் தீவிரமாக முன்னேறி வருகிறது.
தொடர்ந்து முல்லைத்தீவு நோக்கி ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது. அங்கு விமானங்கள் குண்டுகளை வீசி சரமாரியாக தாக்கி வருகின்றன.
புலிகளின் பயிற்சி முகாம் பிடிபட்டது:
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமையும், மருத்துவமனையையும் ராணுவம் பிடித்துள்ளது.
யாழ்ப்பாணம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் இலங்கைப் படைகள் கொண்டு வந்துள்ள நிலையில் முல்லைத்தீவில் ராணுவம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு தெற்கில் உள்ள வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் ரகசிய மறைவிடங்கள் மீது விமானப்படை வி்மானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளன. இந்த பகுதியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விமானப்படை செய்தித்தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், பிரபாகரன் பதுங்கியிருப்பதாக கருதப்படும் இடங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினோம்.
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவை ராணுவம் வேகமாக முற்றுகையிட்டு வருகிறது. அவருக்கு பாதுகாப்பான இடம் என்று இப்போது எதுவும் இல்லை. அவரது பாதுகாப்பு குறைந்து கொண்டு வருகிறது. தப்பி ஓடுவதற்கான வழிகளும் அவருக்கு குறைந்து கொண்டு வருகிறது.
தற்போது 59வது படைப் பிரிவு, வெளி ஓயாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகிறது. முல்லைவளை -தன்னியூத்து மாவட்ட அரசு மருத்துவமனை தற்போது ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது. இது விடுதலைப் புலிகள் வசம் இருந்து வந்தது.
இதை தங்களது காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக புலிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும், கிளிநொச்சி அருகே உள்ள கேரிடமடு என்ற இடத்தில் உள்ள புலிகளின் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி முகாமையும் ராணுவம் பிடித்துள்ளது என்றார் அவர்.
காடுகளுக்குள் புலிகள் ..
இதற்கிடையே தேவையில்லாத உயிரிழப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு வனங்களுக்குள் ஊடுறுவிப் போய் விட்டனர் என்று கூறப்படுகிறது. இதனால் ராணுவத்தால் பிரபாகரனையோ அல்லது விடுதலைப் புலிகள் அனைவரையுமோ பிடிப்பது என்பது எளிதான காரியம் இல்லை என்கிறார்கள்.