சத்யம் கம்ப்யூட்டர்ஸின் புதிய சிஇஓ விவேக் பால்?
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே விவேக் பாலின் பெயர் இந்தப் பதவியுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது என்றும், சத்யம் நிறுவன தலைமைப் பொறுப்பை ஏற்பது குறித்துப தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
1999-2005 ஆண்டுகளில் விப்ரோவின் துணைத் தலைவராக இருந்தவர் விவேக் பால். விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். விப்ரோ மெடிக்கல்ஸ் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.
விப்ரோவிலிருந்து விலகி பின்னர், டிபிஜியில் இணைந்தார். சத்யம் - மேடாஸ் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, இவர்தான் ராமலிங்க ராஜூவுக்கு பதில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அரசு நியமித்துள்ள சத்யம் இயக்குநர் குழுவின் சிஇஓ தேர்வுப் பட்டியலில் விவேக்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, எம்பஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ராவ் பெயரும் சத்யம் தலைமைப் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.