விமான என்ஜினில் தீ: அவசரமாக தரையிறக்கம்
ஜெட் ஏர்வேசின் துணை நிறுவனமான ஜெட்லைட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் 38 பயணிகள், 2 விமானிகள், 6 சிப்பந்திகளுடன் இன்று காலை 6.20 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்திக்கு புறப்பட்டது.
விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஒரு என்ஜினில் தீ பிடித்துக் கொண்டது. என்ஜினில் புகை வெளியேறுவதைப் பார்த்த விமானி உடனே அந்த என்ஜினின் இயக்கத்தை நிறுத்திவிட்டு உடனடியாக விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்திலேயே தரையிறக்க விமானி அனுமதி கோரினார்.
தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அந்த விமான பயணிகள் 10 மணிக்கு வேறு விமானம் மூலம் குவஹாத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமானத்தில் பறவை மோதல்:
இதற்கிடையே இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது பறவை மோதியது.
கொழும்பு நகரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 89 பயணிகளுடன் விமானம் வந்தது.
விமானம் ஓடுபாதையில் பறவை மோதி விமானத்தில் என்ஜின் பகுதியில் மாட்டிக் கொண்டது. இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
என்ஜினில் மாட்டிய பறவையை வெளியில் எடுக்க அதிக நேரமானதால் மீண்டும் இரவு 11 மணிக்கு இலங்கை புறப்பட வேண்டிய விமானம் ரத்தானது.
அதில் செல்ல வேண்டிய 152 பயணிகளும் ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் என்ஜின் சீரமைக்கப்பட்டு ஒரு நாள் தாமதமாக நேற்று கிளம்பியது.