என்.கே.கே.பி. ராஜாவின் கேபிள் டிவி அலுவலக பெண் ஊழியர் தற்கொலை
ஈரோடு: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் கேபிள் டிவி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி பதவியிழந்தவர் என்.கே.கே.பி. ராஜா. இவருக்குச் சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் உள்ளது. கிங்ஸ் டிவி என்பது அதன் பெயராகும்.
இதற்கான தலைமை அலுவலகம் ஈரோட்டில் உள்ளது. இதில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வந்தவர் மாலதி. இவர் ஈரோடு, கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்தவர்.
உண்மையில் மாலதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். பகுதி நேர அலுவலாக மாஜி அமைச்சரின் கேபிள் டிவி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை கொடுமுடி வந்தார் மாலதி. பஸ் நிலையம் வந்து இறங்கியதும் வாந்தி எடுத்தபடியே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், மாலதியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்காமல் மாலதி உயிரிழந்தார்.
அவர் விஷம் சாப்பிட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாஜி அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.