யுஎஸ்: சத்யம் என்ஜீனியர் கொலை-ஒருவர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்றி வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன சாப்ட்வேர் என்ஜீனியர் அக்சய் விஷால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்கன்சாஸ் மாகாணம், லிட்டில் ராக் நகரில் உள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் விஷால். ஆந்திராவைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் இவர் அங்கு சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 14 மாதங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட 7வது இந்தியர் விஷால் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆர்கன்சாஸ் போலீஸார், ஒரு நபரைக் கைது செய்துள்ளனர். அவரது பெயர், விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.
இருப்பினும் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 வயது, அவரது பெயர் பிரன்டன் ஜான்சன் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
வழிப்பறியால்தான் இந்த கொலை நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உடலைக் கொண்டு வர முயற்சி ..
இதற்கிடையே, விஷாலின் உடலை அமெரிக்காவிலிருந்து கொண்டு வர ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநில, வெளிநாடு வாழ் தெலுங்கருக்கான விவகார துறை அமைச்சர் முகமதுஅலி ஷபீர் தூதரக நடவடிக்கைகள் முடிந்து விஷாலின் உடலை விரைவில் இங்கு எடுத்துவருவோம்.
அமெரிக்காவில் தெலுங்கர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளோம். அவர்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.