இந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்குமா?
சென்னையில் படித்தவர் இந்திரா நூயி. பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருக்கிறார். உலகின் சக்தி வாய்ந்த 3வது பெண்மணியாக முன்பு போர்ப்ஸ் இதழால் தேர்வு செய்யப்பட்டவர்.
பெப்சி நிறுவனத்தின் வருவாயை கிடுகிடுவென அதிகரிக்க உதவியவர். சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர்.
இந்த நிலையில் ஓபாமா அமைச்சரவையில், இந்திராவுக்கு வர்த்தக அமைச்சர் பதவி தரப்படும் என பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து பல்வேறு இந்திய அமைப்புகள், இந்திராவின் பெயரை பரிந்துரைத்து, ஓபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், அதிபர் பதவியை ஏற்கவுள்ள பாரக் ஓபாமா அளித்த விருந்து நிகழ்ச்சியில் இந்திரா நூயியும் கலந்து கொண்டார். மிக மிகச் சிலரே அழைக்கப்பட்டிருந்த ஓபாமாவின் தனிப்பட்ட விருந்தாகும் இது. எனவே இந்திரா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்று அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.