மேடாஸ் டீலை முடிக்க ராஜு கையாண்ட டெக்னிக்!!
சத்யம் நிறுவனத்தின் இன்றைய மோசமான நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டதே மேடாஸ் டீல்தான். மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ரா நிறுவனங்களை ராஜுவின் மகன் தேஜா ராஜு கவனித்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் இந்த இரு நிறுவனங்களையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸுடன் இணைக்க தீவிரமாக முயன்றார் ராமலிங்க ராஜு. ஆனால் இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க, ராஜு சில காரணங்களைக் கூறியுள்ளார். அதில் முக்கியமானது, சத்யம் நிறுவனத்தைக் கையகப்படுத்த, ஐபிஎம் முயன்று வருகிறது, என்பதாகும்.
"ஐபிஎம் கைக்கு சத்யம் போனால், அடுத்த கட்டமாக வேலை இழப்புகள் தொடர் கதையாகிவிடும். கிட்டத்தட்ட நிறுவனத்தின் பணியாளர்களில் 50 சதவீதத்தினரைக் குறைத்து விடுவார்கள். சத்யம் நிறுவனம் கம்ப்யூட்டர் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தினால்தானே ஐபிஎம் கையகப்படுத்தும்... அதுவே, ஐபிஎம்முக்குப் பிடிக்காத வேறு தொழில்களிலும் நம்முடைய கவனத்தைத் திருப்பினால், ஐபிஎம் நம் பக்கம் திரும்பாது. நிறுவனம் தப்பித்து விடும். எனவே மேடாஸை இணைப்பதில் தாமதமில்லாமல் செயல்பட வேண்டும்" என இயக்குநர் குழுவை வலியுறுத்தியுள்ளார் ராஜூ.
இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.
உண்மையில் ஐபிஎம் நிறுவனம் சத்யத்தைக் கையகப்படுத்த முயற்சித்ததா... இந்தக் கேள்விக்கு ஐபிஎம் தரப்பில் இதுவரை பதிலில்லை.