வாஜ்பாய்க்கு எதிராக போட்டியில்லை-சஞ்சய் தத்
லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எனது தந்தை போன்றவர். லக்னெளவில் அவர் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்து போட்டியிட மாட்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
சஞ்சய் தத் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் லக்னெள தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆயுத வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவர் போட்டியிட அனுமதி கிடைக்காவிட்டால் அவரது மனைவி மான்யதா நிறுத்தப்படுவார் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் சஞ்சய்தத் நேற்று முதல் முறையாக தொகுதி வேட்பாளராக லக்னெள வந்தார். மனைவி மான்யதா, கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர்சிங் ஆகியோருடன் வந்த சஞ்சய் தத்துக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியது, லக்னெள தொகுதி மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள். இது எனது சொந்த ஊர். தேர்தலில் போட்டியிடும்படி அமர்சிங் இட்ட கட்டளையை என்னால் மறுக்க முடியவில்லை.
கடந்த தேர்தலில் வாஜ்பாய் லக்னெளவில் தான் போட்டியிட்டார். அவர் எனது தந்தை போன்றவர். அவரது அனுபவத்துக்கு முன் நான் சிறியவன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் இங்கு மீண்டும் போட்டியிட்டால் எதிர்த்து நிற்க மாட்டேன்.
எனது தந்தை சுனில் தத் தீவிர காங்கிரஸ்கார். அவரது மரணத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் என்னை தனிமையில் விட்டுவிட்டனர்.
காங்கிரஸை விட்டு பிரிந்தாலும் தேர்தலில் காந்திய முறையை கடைப்பிடிப்பேன். தேர்தலில் போடியிட அனுமதி கிடைக்காவிட்டால், யார் போடியிடுவார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்றார் சஞ்சய் தத்.