ஜெ. உண்மை தெரியாமல் பேச கூடாது: தா.பாண்டியன்
மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வாழ்த்தி அவர் பேசுகையில்,
இலங்கை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையே அல்ல. ஆனால், இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்.
நிலவுக்கு சந்த்ராயன் விண்கலத்தை அனுப்புகின்றனர். ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும். ஆனால், இதை யார் செய்வது?.
முல்லைத் தீவில் அடைக்கம் புகுந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை விமானப் படை குண்டுகளை வீசி கொன்று குவித்து வருகிறது.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி நீங்கள் உண்ணாவிரதம் இருக்காதீர்கள். நல்ல முடிவை எடுங்கள். தமிழர்களுக்காக போராடும் உங்களைப் போன்ற நல்ல தோழர்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. நாம் சாகப்பிறந்தவர்கள் அல்ல.
தமிழ் இனத்தை அழிப்பவர்களை நசுக்க பிறந்துள்ளோம். வாக்குச் சீட்டுகளை பெறுவதைவிட தமிழ் மக்களின் உயிரை காப்பதுதான் முக்கியம்.
இலங்கை பிரச்சினையில் எங்கள் பங்கு என்ன என்பதை, மாநில செயற்குழுவில் அறிவிக்க இருக்கிறோம். இலங்கை பிரச்சனையைத் தீர்க்க இளைஞர்கள் வீர மரணம் அடையவும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
ஜெயலலிதா உண்மை தெரியாமல் பேசக் கூடாது:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய பாண்டியன்,
கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசியல் நிலை பற்றியும், வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் பற்றியும் விவாதித்தோம். தோழமைக் கட்சிகளுடன் நாளை முதல் பேச்சுவார்த்தை தொடங்குவோம்.
இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன் போர் நிறுத்தம் பற்றி பேச இலங்கைக்கு வரவில்லை. மத்திய அரசு போர் நிறுத்தம் பற்றி பேச சொல்லவில்லை என்று கூறி இருக்கிறார். முல்லைத் தீவில் தமிழர்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தப்படும் வேளையில் இவ்வாறு அவர் கூறுவது இந்திய தமிழ் மக்களை அவமதிப்பது போலாகும்.
தமிழக முதல்வர் இலங்கை பிரச்சினைக்காக தியாகம் செய்ய தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் எதை தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டும்.
போர் வந்தால் சிலர் சாகத்தான் செய்வார்கள் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இலங்கை தமிழர்களை கவசமாக பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர்களிடம் இருந்து தமிழர்களை காக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அப்பாவி மக்களை கொல்லும் எண்ணம் சிங்கள ராணுவத்துக்கு இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா அவ்வாறு அவர் கூறி இருந்தால் அது தவறு. நாங்கள் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். நடுநிலையாளர்கள் 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு சென்று வரச் செய்து அங்குள்ள தமிழர்களை பேட்டி எடுத்து வரட்டும். விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
புலிகளை எதிர்த்து போராட்டம் நடத்தவும் நாங்கள் தயார். எனவே உண்மை நிலை தெரியாமல் பேசக்கூடாது. தேர்தலுக்காக இலங்கை பிரச்சனையை யாரும் பயன்படுத்த கூடாது. அது ராஜபக்சே தமிழர்கள் மீது வீசும் குண்டுகளை விட கொடுமையானது.
திருமாவளவன் உண்ணாவிரதம் திட்டமிட்ட நாடகம் என ஜெயலலிதா கூறுவது அவருடைய கருத்து என்றார் பாண்டியன்.