தொழிலதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை: அறந்தாங்கி நிதி நிறுவன அதிபர் வீட்டில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி்யில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சுப்பிரமணியன். அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கும் தனது மகள் தேவியை பார்க்க சென்றார்.
சுப்பிரமணியன் ஊரில் இல்லாததை எப்படியோ தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று வீரமாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
அந்த வழியாக வந்த சுப்பிரமணியனின் மேலாளர் குமார் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து சுப்பிரமணியனுக்கும், காவல்துறைக்கும் குமார் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பு துலக்கி வருகின்றனர்.