லைசென்ஸ்-ஆர்டிஓ ஆபிஸ் போன பிரதமர்
டெல்லி: கடும் பணிகளுக்கு இடையே பிரதமர் மன்மோகன் சிங் தனது டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் சென்றார்.
டெல்லி இந்திரபிரஸ்தா பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) 1992ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் டிரைவிங் லைசென்ஸ் எடுத்தார். கடந்த 45 நாட்களுக்கு முன் அது காலாவதியாகி விட்டது.
இதையடுத்து டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பதற்காக இந்திரபிரஸ்தா வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சிங் நேரில் சென்றார்.
நவீன பயோ-மெட்ரிக்' முறையிலான லைசென்சை பெறுவதற்கு தேவையான புகைப்படங்கள் மற்றும் கைரேகை உள்ளிட்டவற்றை அளித்ததுடன் விண்ணப்பத்தையும் நிரப்பிக் கொடுத்தார்.
பிரதமருடன் அவரது மனைவி குர்சரண் கவுரும் போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார். அவரும் தனது டிரைவிங் லைசென்சை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.