மேடாஸ் சிஇஓ ராஜினாமா!!
மும்பை: மேடாஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பிகே மாதவ் இன்று ராஜினாமா செய்துவிட்டார். அவரது ராஜினாமா குறித்த கடிதத்தை இன்று செபியிடம் சமர்ப்பித்துவிட்டது மேடாஸ் நிறுவனம்.
சில தனிப்பட்ட காரணங்களுக்காக மாதவ் இந்த முடிவை எடுத்துள்ளதாக மேடாஸ் தெரிவித்துள்ளது. சத்யம் நிறுவனத்தை படுபாதாளத்துக்குத் தள்ளிவிட்ட அதன் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் குடும்பத்தின் கட்டுப்பாட்டி்ல இயங்குபவை மேடாஸ் இன்ப்ரா மற்றும் மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் நிறுவனங்கள்.
இதில் மேடாஸ் இன்ப்ரா பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை சத்யத்துடன் இணைக்க முற்பட்டதிலிருந்துதான் சத்யம் நிறுவனத்துக்கு கஷ்ட காலம் தொடங்கியது.
இப்போது சத்யம் நிறுவனத்தின் மோசடிகள் குறித்து அரசு புலனாய்வு ஏஜென்ஸிகள் முழுமையான விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே நேரம், மேடைஸ் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும் தோண்டி எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் ராமலிங்க ராஜூ சத்யம் பொறுப்பிலிருந்து விலகிய நேரத்திலேயே, மேடாஸ் இன்ப்ராவின் செயல் நிலையில் அல்லாத இயக்குநர் மற்றும் தலைவரான ஆர்சி சின்ஹா ராஜினாமா செய்துவிட்டார்.
இப்போது மேடாஸ் இன்ப்ராவின் தலைமைச் செயல் இயக்குநர் பிகே மாதவும் அந்தப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்பட்டாலும், தீவிர மோசடி புலனாய்வு நிறுவனத்தின் வளையத்துக்குள் மேடாஸ் வந்துள்ள நிலையில் மாதவ் ராஜினாமா செய்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேடாஸ் நிறுவனத்தில் ராஜுவின் மகன் தேஜா ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு 36 சதவீத பங்குகள் உள்ளன.