பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை
அதிக வேக க்ரூஸ் ரக ஏவுகணை பிரம்மோஸ். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் இன்று பிரம்மோஸ் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் மற்றும் டி.ஆர்.டி.ஓ ஆகியவை இணைந்து இந்த சோதனையை நடத்தின.
300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறி பார்த்து தாக்கும் வல்லமை படைத்தது பிரம்மோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த ஏவுகணை சோதனை, பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது வழக்கமான பரிசோதனைதான். எந்த விசேஷமும் இதில் இல்லை. பாகிஸ்தானை மிரட்ட இதை செய்யவில்லை. அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நமது பாதுகாப்புப் படைகள் எந்தவித அச்சுறுத்தலையும் சந்திக்க தயாராக உள்ளன.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
மாலேகான் வழக்கு நமது உள்நாட்டு விவகாரம். அந்த வழக்கை நாம் முறையாக விசாரித்து வருகிறோம். தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் சிறந்த முறையில் அதை கையாண்டு வருகின்றனர் என்றார் அந்தோணி.