கஸாப்பின் போலீஸ் காவல் பிப். 2 வரை நீட்டிப்பு
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கைதாகியுள்ள தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீன் கஸாப்பின் போலீஸ் காவல் பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26ம் தேதி இரவு கஸாப் பிடிட்டான். அன்று முதல் அவன் தொடர்ந்து போலீஸ் காவலில் இருந்து வருகிறான். அவன் மீது மொத்தம் 12 வழக்குகளை மும்பை போலீஸார் தொடுத்துள்ளனர்.
கடைசியாக அவனுக்கு ஜனவரி 4ம் தேதி போலீஸ் காவல் நீட்டிக்கப்ப்டடது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சிறையில் வைத்தே போலீஸார் காவலை நீட்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கஸாப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ரகசிய இடத்திற்கு கூடுதல் மெட்ரோபாலிடன் கோர்ட் மாஜிஸ்திரேட் ஸ்ரீமங்கள் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் தமால் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு நடந்த விசாரணையின்போது, கஸாப்பை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலை நீட்டிக்குமாறு மாஜிஸ்திரேட்டிடம் வாதிடப்பட்டது.
அப்போது கஸாப்பிடம் நீதிபதி சில கேள்விகளைக் கேட்டார். மேலும் போலீஸார் சரியாக நடத்துகின்றனரா என்றும் கேட்டார். அதற்கு கஸாப், போலீஸார் மீது எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து கஸாப்பின் காவலை பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.