For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாலேகான்: முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

By Sridhar L
Google Oneindia Tamil News

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாலேகான் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த செயலில் அனைவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.

வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கர்கரே உயிரிழந்தார். இருப்பினும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தொய்வின்றி விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையி்ல் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குண்டுகளை சப்ளை செய்த புரோஹித்...

மாலேகான் சதிச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக லெப்டினன்ட் கர்னல் புரோஹித் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர்தான் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆட்களை ஏற்பாடு செய்த பிரக்யா...

அதேபோல பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், வெடிகுண்டுகளை வைக்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

குற்றப் பத்திரிக்கையின் முக்கிய அம்சங்கள்...

கடந்த 2007ம் ஆண்டு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பை தொடங்கினார் புரோஹித். இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.

தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டினார் புரோஹித். ரூ. 21 லட்சம் வரை இவ்வாறு அவர் திரட்டினார். இந்தப் பணத்தை அமைப்பின் பொருளாளர் அஜய் ரஹீர்கர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படி கேட்டுக் கொண்டார்.

மாலேகான் குண்டுவெடிப்புக்கான சதித் திட்டம் தொடர்பான கூட்டங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கின. பரீதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய இடங்களில் கூட்டம் போட்டு ஆலோசித்துள்ளனர்.

காஷ்மீரில் பணியில் இருந்த புரோஹித் அங்கிருந்து திரும்பியபோது ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை கொண்டு வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் ராம்ஜி கலஸங்கரா, சந்தீப் டாங்கே, பிரவீன் முத்தலீக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெடிகுண்டுகளை இவர்கள்தான் வைத்துள்ளனர் என்று குறப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி கூறுகையில், புரோஹித்தான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸை கொடுத்தார் என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதற்கான ஆதாரம் இல்லை.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும்போது விசாரிக்கப்பட்ட ஒரு சாட்சி, புரோஹித்தான் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸைக் கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. புரோஹித் மீதான இந்த குற்றச்சாட்டை ஒரே ஒரு சாட்சிதான் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஹரியானா போலீஸாரும் விசாரித்தனர். நாங்களும் விசாரித்தோம். எங்களது விசாரணையில், புரோஹித் மீதான இந்தப் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிய வந்தது.

அதேபோல புரோஹித் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தவிர வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை என்றார் ரகுவன்ஷி.

சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸாரின் இந்த கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X