நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி: நடிகர் கார்த்திக்!
நாகர்கோவில்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதன் தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அன்புவனத்தில் நடந்த பாலபிரஜாபதி சுவாமிகள் பிறந்தநாள் விழாவில் கார்த்திக் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், அம்மாவை தெய்வமாகவும் கோயிலாகவும் நினைத்து வழிபடுகிறவன் நான். அதனால் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை. இது ஆன்மீக மேடை. இங்கு அரசியல் பேச விரும்பவில்லை.
நமக்கு முன்னோடியாக திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்றும், மரியாதையும் வைத்துள்ளேன்.
இப்போதுள்ள அரசியல் தலைவர்களில் சிலர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். பதவியில் அமர்ந்ததும் மக்களை மறந்து விடுகிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பினரும் தீர்வு காண வேண்டும்.
வரும் மக்களவைத் தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி, ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும்.
எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றார் கார்த்திக்.