இ.முன்னணி பிரமுகர் மனைவி கொலை: அல்-உம்மா தீவிரவாதி கைது
சென்னை: நாகை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் முத்துக்கிருஷ்ணனின் மனைவியை தபால் குண்டு மூலம் கொலை செய்த அல் உம்மா தீவிரவாதியை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி தங்கம்.
கடந்த 1995ம் ஆண்டு முத்துக்கிருஷ்ணன் வீட்டுக்கு தபால் பார்சல் ஒன்று வந்தது. அதை வாங்கிப் பிரித்து பார்த்தார் தங்கம். அப்போது அதில் இருந்த குண்டு வெடித்ததில், தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல,மயிலாடுதுறை பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் ஜெகவீரபாண்டியனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சந்தேகமடைந்த ஜெகவீரபாண்டியன் தபாலை பிரித்து பார்க்காமல் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து போலீஸார் அந்த தபாலில் இருந்த வெடிகுண்டை செயலிழக்க வைத்தனர்.
இரு சம்பவங்களுக்கும் ஒரே நபர்தான் தொடர்புடையவராக இருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர்.
நாகூர் போலீசாரும், மயிலாடுதுறை போலீசாரும் முதலில் விசாரணை நடத்தினார்கள். வெடிகுண்டு தபால்களை அனுப்பிய 8 அல்-உம்மா தீவிரவாதிகளை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் துப்பு துலங்காததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசேஷ போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசேஷ பிரிவு போலீஸ் படையினர் அல்-உம்மா இயக்க தீவிரவாதிகளான ஹாரூண் இஸ்மாயில் (35), ரபாயி, முகம்மது குத்புதீன், ராஜா உசேன், ஜாகீர்உசேன், சுபேர், அப்துல் அஜீஸ் ஆகிய 7 பேரைக் கைது செய்தனர்.
அபுபக்கர் சித்திக் என்பவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். கைதான மற்ற 7 பேர் மீதும் சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அபுபக்கர் சித்திக்கை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்துள்ளது. வழக்கு விசாரணை நடக்கும்போது தீவிரவாதி ஹாரூண் இஸ்மாயில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளிவந்தவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.
இவர் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கீழக்கரை தர்காகுளத்தை சேர்ந்தவர். இவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 7.8.2005 அன்று துபாய் தப்பி சென்றுவிட்டார். துபாயில் உள்ள காண்டிராக்டு நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார்.
இவரை சர்வதேச போலீஸ் மூலம் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தனிப்பிரிவு போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இவரை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
ஹாரூண் இஸ்மாயிலை தேடப்படும் குற்றவாளி என்றும், அவரை பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்கும்படியும் இவரது புகைப்படத்துடன் தனிப்படை போலீசார் உலகம் முழுவதுமுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் அனுப்பினார்கள்.
இந்த நிலையில், பாங்காக் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. விசேஷ பிரிவு போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. அதில், தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் தீவிரவாதி இஸ்மாயில் சென்னை வருவதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் உஷாராகினர். விமான நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். எஸ்.பி. செந்தில்குமாரி, டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ரத்தினமணி ஆகியோர் தலைமையில் போலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் தயாராக காத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை விட்டு இறங்கும்போது தீவிரவாதி ஹாரூண் இஸ்மாயிலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் கிண்டியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்கு பிறகு ஹாரூண் இஸ்மாயில் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அபுபக்கரை தொடர்ந்து போலீஸார் தேடி வருகின்றனர்.
பிடிபட்டுள்ள இஸ்மாயில், எம்.எஸ்.சி படித்தவர் ஆவார். இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
போலீஸார் நடத்திய விசாரணையின்போது, தபால் வெடிகுண்டு அனுப்பியது 3 பிரிவாக செயல்படுத்தப்பட்டது. ஒரு பிரிவினர் தபால் குண்டை தயாரித்தனர். இன்னொரு பிரிவு தபால் குண்டை எடுத்து வந்தனர். 3வது பிரிவினர் தபால் குண்டை அனுப்பி வைத்தது. தபால் குண்டை அனுப்பும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன் என்று கூறியுள்ளார் இஸ்மாயில்.