கள் இறக்கும் போராட்டம்-நூற்றுக்கணக்கானோர் கைது
சென்னை: கள் இறக்கி, விற்று போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கள் இறக்க, விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு மது வகைகளை விதம் விதமாக கடை திறந்து விற்கும்போது கள்ளுக்கு மட்டும் தடை விதிப்பதா என கூறி தமிழ்நாடு கள் இயக்கம் சார்பி்ல் கள் இறக்கி விற்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு அரசு தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கள் இறக்கும் போராட்டம் நடந்தது. அதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெமோரியல் ஹால் பகுதியில் போராட்டம் நடத்த வந்த தமிழ்நாடு கள் இறக்குவோர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையிலான 50க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து கல்யாண மண்டபம் ஒன்றுக்கு கொண்டு சென்றனர்.
கோவை, சின்னதடாகம் பகுதியில் விவசாயிகள் சங்கத்தலைவர் ராமசாமி, செயலாளர் ராமசாமி உட்பட 24 பேர் கள் இறக்கி விநியோகம் செய்ய வந்த போது மரப்பாலம் அருகே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 100 பேரும், திருப்பூர் பகுதியில் 150 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பெத்தானியாபுரத்தில் கள் இறக்குவதற்காக மண்பானைகளுடன் வந்த நாடார் மகாஜன சபைத் தலைவர் கரிக்கோல் ராஜ் உட்பட 150 பேர் கைது செய்யப் பட்டனர்.
கள் இறக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசின் பனைவாரியத் தலைவர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கு எதிராக போராட்டக் காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேபோல கள் இறக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு நாடார் பேரவையினரை போலீஸார் கைது செய்தனர்.