பிரம்மோஸ் சோதனை தோல்வியா? குறி தவறியதாக கூறுகிறது டி.ஆர்.டி.ஓ
டெல்லி: அதி நவீன பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்த மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம் (டி.ஆர்.டி.ஓ),நேற்று சோதனையில் சில தடங்கல்கள் ஏற்பட்டதாகவும், இலக்கை சரியாக ஏவுகணை தாக்கவில்லை என்றும் கூறியுள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அதி நவீன ஏவுகணை பிரம்மோஸ். ரஷ்யாவுடன் இணைந்து இந்த ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது.
தரையில், 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய வல்லமை படைத்தது பிரம்மோஸ். ஒலியை விட 2.8 மடங்கு வேகமாக செல்லக் கூடியது. அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லக் கூடிய திறமை படைத்தது.
இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்கோ ஆகியவற்றின் பெயர்களை இணைத்துத்தான் இந்த ஏவுகணைக்கு பிரம்மோஸ் என பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனடோலி செர்தூய்கோவ் வந்திருந்தபோது, ஏற்கனவே உள்ள சூப்பர் சானிக் பிரம்மோஸை மேம்படுத்தி, அதை ஹைபர் சானிக் ஏவுகணையாக தரம் உயர்த்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலக அளவில் இத்தகைய தரத்தில் உள்ள ஏவுகணைகளிலேயே அதி நவீன ஏவுகணையாக பிரம்மோஸ் கருதப்படுகிறது.
இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை நேற்று முன்தினம் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சோதனையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், இலக்கை சரியாக ஏவுகணை தாக்கவில்லை என்றும் டி.ஆர்.டி.ஓ நேற்று அறிவித்தது.
இதுகுறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை சோதனையின் கடைசி கட்டத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை தாக்கவில்லை.
ஏன் இலக்கை ஏவுகணை தாக்கவில்லை என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்ந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
முதலில் வெற்றி பெற்றதாக கூறிய டி.ஆர்.டி.ஓ. தற்போது அதை மறுத்துக் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.