ஜாகிரை மும்பைக்குக் கொடுத்து உத்தப்பாவை பெற்ற பெங்களூர்
மும்பை: ஜாகிர் கானை ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கொடுத்து, அவருக்குப் பதில் கர்நாடகத்தைச் சேர்ந்த ராபின் உத்தப்பாவை பெற்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணி மும்பை இந்தியன்ஸ். டிராவிட் தலைமையிலான அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
கர்நாடக ரஞ்சி கேப்டனான ராபின் உத்தப்பா, மும்பை அணியில் ஆடி வருகிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாகிர் கான் பெங்களூர் அணியில் உள்ளார்.
இந்த நிலையில் ஜாகிர்கானை மும்பைக்குக் கொடுத்து விட்டு ராபின் உத்தப்பாவைப் பெற பெங்களூர் அணி விருப்பம் தெரிவித்தது.
இதுதொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிந்து இரு வீரர்களும் பரஸ்பரம் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக இரு அணிகளும் எந்தத் தொகையையும் பரிமாறிக் கொள்ளவில்லையாம்.
ஏற்கனவே மும்பை அணி, ஆஷிஷ் நெஹ்ராவை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்குக் கொடுத்து விட்டு, அவருக்குப் பதிலாக ஷிகார் தவானை மும்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.