சத்யம் சிஇஓ, சிஎப்ஓ - இறுதிப் பட்டியலில் தலா மூவர்
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு விண்ணப்பித்திருந்த 40 பேரில், பெரும் விவாதத்துக்கிடையே மூன்று பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது இயக்குநர்குழு.
அதேபோல சிஎப்ஓ எனப்படும் நிதித் துறை தலைவர் பொறுப்புக்கும் மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மூவரில் ஒருவர்தான் சத்யம் தலைவராகவும், நிதித்துறை தலைவராகவும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
புதிய சிஇஓவை தேர்வு செய்வதற்காக சத்யம் இயக்குநர் குழுக் கூட்டம் கடந்த 2 தினங்களாக ஹைதராபாத்தில் நடந்தது. இப்பதவிக்காக வந்திருந்த 40 பேரின் விண்ணப்பங்கள் முழுவதுமாகப் பரிசீலிக்கப்படன. பலத்த விவாதங்களுக்குப் பின், இந்த 40 பேரில் 3 பேரை சிஇஓ பதவிக்காக தேர்வு செய்துள்ளனர்.
அரசிடம் கலந்து ஆலோசித்த பின் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்.
எப்படியும் இன்னும் 5 தினங்களுக்குள் புதிய சிஇஓ யார் என்பது தெரிந்துவிடும் என சத்யம் இயக்குநர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சத்யம் நிறுவனத்தின் நிதித் தேவைகளுக்கு பணம் ஏற்பாடு செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், நிறுவனத்துக்கு வரவேண்டிய தொகையையும் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தீபக் பரேக் தெரிவித்தார்.