பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5, டீசல் ரூ. 1 குறையலாம்
டெல்லி: சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை ஒரு ரூபாயும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும். அதேபோல காஸ் சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையடுத்து மத்திய பெட்ரோலியத்துறையும், விலைக் குறைப்புக்கு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை ஒரு ரூபாயும் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
தற்போது பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 9 ரூபாய் 86 காசும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 3 ரூபாய் 48 காசும் லாபம் கிடைத்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாயும் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.
விலை குறைப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே உரிய நேரத்தில் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமையல் காஸ் விற்பனையை பொறுத்தமட்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கு சிலிண்டருக்கு 32 ரூபாய் 97 காசு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே சமையல் காஸ் விலையில் பெருமளவில் குறைப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.