ரேபரேலி அருகே ரயில் - டிராக்டர் மோதலில் 12 பேர் பலி
ரேபரேலி: உ.பி. மாநிலம் ரேபரேலி அருகே ரயிலும், டிராக்டரும் மோதிக் கொண்டதில் 12 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
ரேபரேலி, உச்சார் ரயில்வே கிராசிங் பகுதியில் இந்த விபத்து நடந்தது.
அலகபாத்தில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் முக்கூடல் பகுதியான சங்கத்தில் புனித நீராடுவதற்காக டிராக்டரில் யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை 9 மணியளவில் இவர்கள் வந்த டிராக்டர் உச்சார் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது, அலகாபாத் - கான்பூர் பாசஞ்சர் ரயில் டிராக்டர் மீது மோதியது.
இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ஆனால் அலகாபாத் - லக்னோ நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.