சென்னை பெண்மணிக்கு விசா கிடைக்க உதவிய ஒபாமா
சென்னை: சென்னையைச் சேர்ந்த சுஜாதா அட்சுமிலி என்ற பெண்ணிக்கு கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்கா செல்ல விசா கிடைக்க பாரக் ஒபாமா உதவிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உலக மக்களின் உள்ளத்தை ஈர்த்துள்ளது பழைய செய்தி. ஆனால் 2004ம் ஆண்டே சென்னையைச் சேர்ந்த சுஜாதா அட்சுமில்லி என்ற பெண்மணியின் குடும்பத்தினரை தனது செயலால் வெகுவாக கவர்ந்து விட்டார் ஒபாமா என்பது புதிய செய்தி.
இதுகுறித்து சுஜாதாவின் மூத்த மகன் ரமேஷ்குமார் கூறுகையில், எனது தாயார் சுஜாதா கணவரை இழந்தவர். எனது தம்பி விஜயக்குமார் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவர் கடந்த 2004ம் ஆண்டு புதிதாக வீடு கட்டினார். இந்த கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு எனது தாயாரை அழைத்திருந்தார் விஜயக்குமார்.
இதையடுத்து விசா கோரி சுஜாதா, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவர் விதவை என்பதால் அமெரிக்கா சென்று தனது மகனுடன் செட்டிலாகி விடுவார் என்று கூறி விசா தர மறுத்து விட்டது தூதரகம்.
எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதையடுத்து அப்போது இல்லினாய்ஸ் மாகாண செனட்டராக இருந்த பாரக் ஒபாமாவுக்கு நிலைமையை விளக்கி விஜயக்குமார் கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்தைக் கண்ட ஒபாமா, உடனடியாக வாஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் சென்னையில் உள்ள துணை தூதரகங்களுக்கு கடிதம் எழுதி, சட்ட விதிமுறைகளின்படி எங்களது தாயாரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்க தூதரகம், எனது தாயாருக்கு 10 ஆண்டுக்கான பலமுறை சென்று வரக் கூடிய விசாவினை வழங்கியது.
இதையடுத்து 2005ம் ஆண்டு அமெரிக்கா சென்ற எனது தாயார் அங்கு தம்பி வீட்டு கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டார்.
விசா கிடைக்க பெரும் உதவி புரிந்த ஒபாமாவுக்கு நேரில் நன்றி சொல்ல அவரது அலுவலகத்திற்கும் போனார். ஆனால் அப்போதுதான் ஒபாமா அலுவலகத்தை விட்டு கிளம்பிப் போயிருந்ததால், அவரை சந்திக்க இயலாமல்
போய் விட்டது.
இருப்பினும் ஒபாமா அலுவலக ஊழியர்கள் எனது தாயாரை சிறந்த முறையில் வரவேற்று கெளரவித்தனர். கண்டிப்பாக எனது தாயாரின் நன்றிகளை ஒபாமாவிடம் தெரிவிப்பதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தனர் என்றார் ரமேஷ்குமார்.