விமான சேவையை பயன்படுத்த என்எஸ்ஜிக்கு மத்திய அரசு சலுகை
டெல்லி: அவசர காலங்களில் தேசிய பாதுகாப்பு படையினர் (என்.எஸ்.ஜி) தங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களில் உள்ள விமானங்களை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பு படையினர் டெல்லியிலிருந்து, வர காலதாமதமானது. அதே போல் கடந்த 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தப்பட்ட சம்பவத்தின் போது, தேசிய பாதுகாப்பு படையினர் அங்கு வந்து சேருவதற்குள் விமானம் அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டது.
விமானம் கிடைக்காமல் திண்டாடியதே இதற்கு முக்கிய காரணம். இது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுக்கு சொந்தமாக விமானம் இல்லாத அவலத்தை மீடியாக்கள் கிழி கிழியென்று கிழித்தன.
இதையடுத்து மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, இனிமேல் இது போன்ற சிக்கல்கள் எழாமல் தடுக்க அருகில் இருக்கும் இடங்களிலிருந்து உடனடியாக விமானங்களை பெற்று கொள்ள என்.எஸ்.ஜிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் மகேந்திர குமாவத் கூறுகையில், இனி மேல் தேசிய பாதுகாப்பு படையினர் தாமதாக வரும் வாய்ப்பில்லை.
மும்பை தாக்குதலின் போது அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்கும், மும்பை விமான நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு செல்வதற்கு தான் தாமதமானது என்றார் குமாவத்.