கன்னியாகுமரி கடல் நீர் இனித்ததால் பரபரப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கடல்நீர் திடீரென இனிப்புத் தன்மை கொண்டதாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள கடலோர கிராமம் பெரியகாடு. அமாவாசையையொட்டி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கரையில் அதிகளவு தண்ணீரை வாறி இறைத்திருந்தது.
எதேச்சையாக அந்த நீரை எடுத்து முதியவர் ஒருவர் குடித்து பார்த்தபோது அது குடிநீர் போல் இனிப்புடன் இருந்தது. இந்த விஷயம் அக்கம்பக்கம் உள்ள கிராமங்களுக்கு வேகமாக பரவியது.
இதையடுத்து ராஜாக்கமங்கலம் துறை, முட்டம், கடியப்பட்டணம், பிள்ளைதோப்பு, அழிக்கால், பொழிக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கு சென்று அதை புனித நீராக கருதி பாட்டில்களில் எடுத்து சென்றனர்.
இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த பகுதியை சேர்ந்த தாமஸ் கூறுகையில், இந்த கடற்கரை பகுதியில் மற்ற இடங்களில் தோண்டினாலும் உப்புச் சுவையுடன் கடல் நீரே கிடைக்கிறது. இங்கு மட்டும் தண்ணீர் சுவையாக இருக்கிறது. தண்ணீரும் எடுக்க, எடுக்க குறையவில்லை என்றார்.
இந்நிலையில் தேங்கியுள்ள தண்ணீரில் கால் வைக்க கூடாது என ஊர் கமிட்டியினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.