சத்துணவு சாப்பிட வந்த குழந்தைகள் சாம்பாரில் விழுந்தன- இருவர் சஸ்பெண்ட்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் சத்துணவு சாப்பிட வரிசையில் நின்ற இரண்டு குழந்தைகள் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து, படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.
இந்தப் பள்ளியில் ஏழுமலை மகள் சூர்யா (7) மற்றும் குப்பன் மகள் ஐஸ்வர்யா (6) ஆகிய இருவரும் சத்துணவு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் மாணவிகள் இருவரும் அங்கு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பாரில் விழுந்து விட்டனர்.
இதில் மாணவிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தகவல் அறிந்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலகுரு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குழந்தைகளை பொறுப்புடன் கவனிக்காமல் இச்சம்பவத்திற்கு காரணமாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் செல்வம் ஆகிய இருவரையும் கலெக்டர் உத்தரவின் பேரில் தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.