விரைவில் 3,500 ஊழியர்களுக்கு கல்தா: கோரஸ் முடிவு
இந்தியாவின் பணக்கார நிறுவனங்களில் டாடாவும் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோரஸ் இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி நிறுவனத்தை வாங்கியது. இதில் மொத்தம் 41,000 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களில் 20 ஆயிரம் இங்கிலாந்தில் பணியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் வேலை பார்க்கும் 3,500 ஊழியர்களை விரைவில் பணிநீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிலிப் வரின் கூறுகையில், கடந்த அக்டோபரில் நிறுவனத்தின் உற்பத்தியை 20 சதவீதம் குறைத்துவிட்டோம். இதன்காரணமாக 3,500 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளோம்.
நிறுவனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நன்றாக யோசித்த பின்னர் இம்முடிவுக்கு வந்துள்ளோம்.
ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கு தற்போது அதிக முன்னுரிமை அளிக்கவிருக்கிறோம். இதன்மூலம் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 1,350 கோடி ரூபாய் வரை மிச்சமாகும். நீக்கப்படும் ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார் வரின்.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன் கூறுகையில், கோரஸ் நிர்வாகத்தின் முடிவு வருத்தம் அளிக்கிறது என்றார்.