குடியரசு தின விழாவில் இன்ஸ்பெக்டர் மாரடைப்பில் மரணம்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் இன்ஸ்பெக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ளது மொட்டை மலை. இங்கு 11-வது சிறப்புக் காவல் படை உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கமாண்டண்ட் சம்பத்ராஜ் கொடியேற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் 5 டிஎஸ்பிக்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அணி வகுப்பு முடியும் தருணத்தில் இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
அவரது உடலை ராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரது உடலுக்கு சிறப்புக் காவல் படை ஐ.ஜி. செண்பகராமன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் இன்னும் ஓய்வு பெற 4 மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.