காஷ்மீர் லஷ்கர் தலைவர் அபு ஹம்சா சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவம் மற்றும் போலீசாருடன் நடைபெற்ற மோதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான அபு ஹம்சா சுட்டுக் கொல்லப்பட்டார். மோதலில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார்.
பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் அருகே தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசார் அங்கு சென்றனர். இவர்களை கண்டதும் தீவிரவாதிகள் சுடத் துவங்கினர்.
பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர். சுமார் 16 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் அபு ஹம்சா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து சோபூர் காவல்துறை கண்காணிப்பாளர் பீம் சென் கூறுகையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தளபதி அபு ஹம்சா கொல்லப்பட்டார். காஷ்மீரில் நடந்த பல தீவிரவாத செயல்களில் அவனுக்கு முக்கிய பங்குள்ளது.
பாரமுல்லா, குப்வாரா மாவட்டங்களில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியவர் அபு ஹம்சாதான்.
இந்த மோதலில் ஒரு ராணுவ வீரரும் பலியானார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் என்றார் அவர்.