பெட்ரோல் ரூ. 5, டீசல் ரூ. 2, காஸ் ரூ. 25 விலை குறைப்பு
டெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையை மத்திய அரசு நேற்று குறைத்தது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே ரூ. 5, ரூ. 2 என குறைக்கப்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 25 குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து மத்திய அரசு பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 2 ரூபாயும் குறைத்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரேபரோலியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்கலாம் என தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று இரவு பொருளாதார விவகாரம் குறித்த கேபினட் கூட்டத்தில் விலைகுறைப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. மேலும், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 25 விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வ்நதுள்ளது.
அமைச்சரவைக் கூட்ட முடிவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்து இருப்பதால் அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைத்து இருக்கிறது என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு - முடிவேதும் இல்லை
பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்.லின் செல்போன் சேவைக்காக சமீபத்தில் 3ஜி ஸ்பெக்ட்ரம்' (மூன்றாம் தலைமுறை அலைவரிசை) அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மத்திய மந்திரிசபை கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்த விவகாரத்தை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்புவது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மேலும் தாமதம் ஆகியுள்ளது.