புதுச்சேரியில் குண்டு வீசி கூலித் தொழிலாளி கொலை !
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டையில் கூலித் தொழிலாளி ஒருவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
கடந்த நவம்பர் 5ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்றால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சாந்தமூர்த்தி என்பவர் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் காந்தியின் தம்பி பரசுராமன்(32) சிமெண்ட் கிடங்கு ஒன்றில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அவர் காரமணி குப்பத்தில் ரெயில்வே கேட் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பரசுராமனை சரமாரியாக வெட்டியது. மேலும், அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தில், பரசுராமன் அதே இடத்தில் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த முத்தையால்பேட்டை போலீசார் சம்வ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப் பகலில் நடந்த இந்த படுகொலை புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.