48 மணி நேரம் போர் கிடையாது - புலிகளுக்கு ராஜபக்சே கெடு
பாதுகாக்கப்பட்ட வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சம் புகும் மக்களையும் இலங்கைப் படைகள் கொன்று குவித்து வருகின்றன.
இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வன்னியில் இரண்டரை லட்சம் தமிழர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டதாகவும் அது உறுதி செய்துள்ளது.
இதையடுத்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அரசு அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று பத்திரிக்கை ஊழியர் ஒருவர் தீக்குளித்து மாண்டார். இதனால் கொதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில் சிலோன் வங்கியும் சூறையாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 48 மணி நேர போர் நிறுத்தத்தை நேற்று இரவு அறிவித்தார் ராஜபக்சே.
இதுகுறித்து அதிபர் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் நடந்து வரும் வடபகுதியில், அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ராணுவம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.
ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை குவித்து இருக்கிறார்கள். ஏவுகணை தளங்களையும் அமைத்து உள்ளனர். அந்த பகுதியில் ஏராளமான தமிழர்கள் உள்ளனர்.
எனவே, அந்த பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அவர்களை விடுதலைப்புலிகள் அனுமதிக்கவேண்டும். இதற்காக விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேரம் இலங்கை அரசு கால அவகாசம் அளிக்கிறது. அதாவது 48 மணி நேரம் கெடு' விதிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேனன் வரவேற்பு
ராஜபக்சே புலிகளுக்கு விதித்துள்ள கெடுவுக்கு இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.எஸ்.மேனன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இலங்கை அரசு கால அவகாசம் அளித்து இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
இதன் மூலம் போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.