செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது குழந்தைகள் நம்பிக்கைமேரி (12), கிறிஸ்டி தீபிகா(8), அசோந்து வினோதின் லூர்துராஜ்(7).
அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நம்பிக்கைமேரி 7-ம் வகுப்பும், கிறிஸ்டி தீபிகா 4-ம் வகுப்பும், லூர்துராஜ் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து இவர்கள் 3 பேரும் வீட்டிற்கு வரவில்லை. மாலை 6 மணி ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் 3 பேரையும் தேடினர்.
அப்போது வேலந்தாங்கல் அருகே உள்ள ஒரு ஏரியின் கரையில் பள்ளிக்கூட பைகள் கிடந்ததை அந்த பகுதியில் உள்ள சிலர் பார்த்தனர். அதனை தொடர்ந்து குழந்தைகள் 3 பேரும் ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற சந்ததேகம் எழுந்தது.
உடனே அருளானந்தம், அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த ஏரிக்கு விரைந்து வந்தனர். உடனே அந்த ஏரியில் பொதுமக்கள் சிலர் இறங்கி குழந்தைகளின் உடலை தேடினர்.
வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்காக ஏரியை தூர்வாரியதால் சகதியாக இருந்தது. இதனால் சுமார் 1 மணி நேரம் போராடி 3 குழந்தைகளின் உடலையும் பொதுமக்கள் மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.